Tuesday, July 9, 2013

மழையின் மொழி



சற்று முன் பெய்த மழையின் ஈரத்தால்
அழுது கொண்டிருந்த கட்டிடங்களின்
மத்தியில் சென்றிருந்தேன்
ஓய்ந்த தூறல்களின் எதிரொலி கூட
இன்னும் நிற்கவில்லை

நெற்றி விளிம்பில் வழிந்த துளியில்
முந்தய மழையின் தருணங்கள் தெரிந்தன

எழும்பு உருக்கும் குளிரால்
உடைந்த மனங்களை உருக்கி ஒட்ட முடிந்தால்

அழுக்கை கழுவும் மழையால்
மனதின் வலியை கழுவ முடிந்தால்

பூமியை நனைத்து உயிரை படைக்கும் போதே
இறந்த உறவை திரும்பி கொடுத்தால்

இரவு பெய்யும் மழையில்
வானவில் எங்கே

முகத்தை முத்தமிடும் சிறு சாரல் மழை
முடிவில்லா தொரு அமைதியை கொடுத்தது

வருடிச் செல்லும் சிறு தூரலில்
தாயின் மொழி கேட்டது

மெல்ல பெய்து சளித்த மழை
பொழிய தொடங்கியது
இறைச்சலின் ஊடே ஒரு ஏகாந்தத்தை உணர்ந்தேன்

வீடு வந்து விட்டது
திறக்கும் பொழுது விரல் நனைத்தது கதவு

கருணை மழையாம்
காதல் மழையாம்
உயிர் மழையாம்
நனைந்த சட்டையை என்ன செய்வது ?
என்பது தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை
மழையின் மொழி மறந்து விட்டது