Tuesday, November 25, 2014

பஸ் பயணத்தின் போது பொழுது போக பத்து யோசனைகள் - பகுதி I


         
        புத்தகம் படிப்பது, ஐபாடில் பாட்டு கேட்பது போன்ற மட்டமான யோசனைகளை இதில் எதிர்பார்க்காதீர்கள். இதில் வரும் யோசனைகள் சக மனிதனுக்கு மரியாதை கொடுப்பது, நல்லொழுக்கமுடன் திகழ்வது போன்ற கொள்கைகளை உடைய சராசரி மனிதர்களுக்கு அல்ல. எப்பவும் எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். இந்த பதிவில் பேருந்து பயணத்தின் பொழுது நான் சந்தித்த மனிதர்களின் தாக்கம் இருக்கும். இந்த பயணம் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கோ அல்லது வேண்டிய இடத்தை அடைவதற்கோ அல்ல, இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே.

         இது ஒரு கடினமான பாதை. இதில் காலடி எடுத்து வைக்க மிக்க தைரியம் வேண்டும். இந்த பயணத்திற்கு முன் உடல், உயிர் மற்றும் ஆன்மா அனைத்தையும் உருக்கி ஊற்றி வேள்வி செய்வது போல தயாராக வேண்டும். 

பயணத்திற்கு தயார் ஆவதற்கு பத்து வழிமுறைகள்

1) முதல் காரியமாக இன்சூரன்ஸ், உயில் மற்ற இத்யாதிகளை தயார் செய்து விடவும். 

2) ஆறு மாதத்திற்கு முன்பே உடற்பயிற்சி செய்ய தொடங்க வேண்டும், நமது நேரம் மோசமாக இருந்து தொலைத்தால் அடி வாங்க உடம்பில் தெம்பு வேண்டும் அல்லவா!!!

3) ஏதாவது ஒரு கோயில் வாசலில் உள்ள பிச்சைக்காரர் வசமிருந்து ஐந்நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் காசுகளாக சில்லறை மாற்றி கொள்ளவும். பணப் பற்றாக்குறை எனில் அவரிடம் வட்டிக்கு கடன் வாங்கலாம்.

4) நான்கு நாட்கள் முன்பே ரோட்டு கடையில் பிரியாணி வாங்கி வைத்துக் கொள்ளவும்.

5) இராணுவத்தில் பயன்படுத்தப்படும் முரட்டுக் காலனி ஒரு ஜோடி வாங்கவும்.

6) மஞ்சப்பை - இப்பொழுது எந்த துணி கடையிலும் மஞ்சப்பை தருவது இல்லை. வீட்டுப் பரணில் இல்லை என்றால் ஈரோடு சென்று ஆர்டர் செய்து வாங்கி வர வேண்டும். ("நகைக் கடையில் மங்களகரமாக இன்னும் மஞ்சப்பை தருகிறார்களே?" என்று கேட்கும் ப்ரகஸ்பதிகளுக்கு - நாம் பஸ் ஏறும் போது ஏழை பட்டிக்காட்டான் போல தெரிய வேண்டும். அதற்கு நகைக்கடை பை உதவாது)

7) மரியாதை என்னும் துண்டையும், மானம் என்னும் சட்டையையும் கழற்றி வீட்டு ஆணியில் மாட்டி விட்டு வரவும். அது இந்த பயணத்திற்கு தேவை இல்லை.


8) மிக முக்கியம், பயணத்தின் போது உறங்கிவிட கூடாது. அதற்காக முந்தைய நாள் இரவு நன்றாக உறங்க வேண்டும். இரவு பயணமெனின் விடுப்பு எடுத்து கொண்டு மதியம் உறங்கலாம் (வேலை போனாலும் கொண்ட கொள்கை மாறலாகாது). 

9.) பழைய பாக்யராஜ் படங்களை பார்த்து அதில் வரும் வசனங்களை கற்கவும், முடிந்தால் "The Art of Acting" by Stella Adler வாங்கி படிக்கவும். பில்லா முதல் பாகத்தில் பிரபு அவர்கள் அஜீத்திற்கு பயிற்சி கொடுக்கும் காட்சியை மீண்டும் மீண்டும் பார்க்கவும்.

10.) பேருந்து கிளம்புவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக பேருந்து நிலையத்திற்கு செல்லவும். பறக்கா வெட்டி போல பேருந்தை பார்த்தவுடன் ஓடிச் சென்று ஜன்னல் சீட் பிடிக்க வேண்டாம். கண் கொத்தி பாம்பாக பேருந்து ஏற வருபவர்களை கவனிக்கவும். நமது காரியத்திற்கு ஏற்றவாறு சிரித்த முகமாக யாராவது வருகிறார்களா என்று கவனிக்கவும், ஒற்றை நாடியாக இருந்தால் கூடுதல் வசதி. நமக்கு வாகாக ஒருவர் சிக்கியவுடன் உடனே முன்னாள் நிற்பவர்களை இடித்து தள்ளி கொண்டு, அவர் பின்னால் சென்று பக்கத்து இருக்கையில் மஞ்சப்பை போடவும். அவரிடம் மிகவும் மரியாதையாக, "நான் கழிப்பிடம் செல்கின்றேன் இருக்கையை பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டு, இறங்கி வந்து பக்கத்து பெட்டிக் கடையில் மறைவாக நின்று தம் வாங்கி அடிக்கவும் (பழக்கம் இல்லை என்றால் ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தே பழகிக் கொள்ளவும்). 

தயார் ஆவதை படித்தே தலை சுற்றி இருக்கும். இனி பேருந்தில் ஏறிய பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

பஸ் பயணத்தின் போது பொழுது போக பத்து யோசனைகள் - பகுதி II